மோடிக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்து போட்டால்.. திமுக எம்.பி.களுக்கு கருணாநிதி வார்னிங்!
குஜராத் கலவரங்களைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து வருகிறது. அமெரிக்கா விசா வழங்கவே கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு 12 கட்சிகளை சேர்ந்த 65 எம்.பிக்கள் ஒபாமாவுக்கு பேக்ஸ் ஒன்றை அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் அமெரிக்கா சென்ற பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், மோடிக்கு விசா வழங்க லாபியில் ஈடுபட்டிருந்தார். அதற்கு செக் வைக்கும் வகையில் கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட அதே பேக்ஸ் கடிதம் மீண்டும் ஒபாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படி ஒரு கடிதத்தில் தாம் கையெழுத்திடவில்லை என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மறுத்தார். இதேபோல் திமுகவின் கே.பி. ராமலிங்கமும் மறுத்தார்.
இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி அவர்களுக்கு அமெரிக்கா செல்ல "விசா" அளிக்கக் கூடாது என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டு அமெரிக்கக் குடியரசு தலைவருக்குக் கடிதம் எழுதியதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் அந்தக் கையெழுத்தினை தாங்கள் போடவில்லை என்றும், இந்தப் பிரச்சினையைக் குறிப்பிட்டு தங்களிடம் யாரும் கையெழுத்து பெறவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தெரிவித்திருக்கிறார்கள்.
தி.மு. கழக நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் தொடர்பு கொண்டு கேட்ட போது தாங்கள் அவ்வாறு கையெழுத்திடவில்லை என்று மறுக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் கூட, தான் அவ்வாறு எந்தவொரு கடிதத்திலும் கையெழுத்திடவில்லை என்று மறுத்துள்ளார்.
தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் எந்தவொரு வெளிநாட்டுக் கொள்கையிலும் அதன் உள்விவகாரங்களில் குறுக்கிடுவதில்லை என்பதை பல முறை நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதைப் போல இந்த விசா பிரச்சினையிலும் தி.மு.கழகம் குறுக்கிடுவதை நாங்கள் ஏற்பதில்லை.
கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்தப் பிரச்சினையிலே அமெரிக்கக் குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று கூறிய போதிலும், அவ்வாறு கையெழுத்திடுவதை தலைமைக் கழகம் ஏற்கவில்லை. அவ்வாறு கையெழுத்திட்டு அனுப்புவது கழகத்திற்கு ஏற்புடையதல்ல! தலைமைக் கழகத்தைக் கலந்து பேசாமல் எவறேனும் அவ்வாறு கையெழுத்திட்டிருந்தால் அவர்கள் மீது கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.