இப்பவும் சொல்றேன்.. பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் போலியானதுதான்: திக்விஜய்சிங்

டெல்லியில் 2008ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சில நாட்களில் டெல்லி ஜாமியா நகர் பகுதியில் பாட்லா ஹவுஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறி போலீசார் முற்றுகையிட்டனர்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 7 பேர் பதுங்கியிருப்பதாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஷாஹ்சத் மட்டும் கைது செய்யப்பட்டார். இந்த மோதலில் டெல்லி என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி மோகன்சந்த் சர்மாவும் உயிரிழ்ந்தார்.
இந்த சம்பவத்தில் கைதான ஷாஹ்சத் மீது பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளரை சுட்டுக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்ற நீதிபதி ராஜேந்தர் குமார் சாஸ்திரி நேற்று பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் உண்மையானதே. பிடிபட்ட ஷாஹ்சத் குற்றவாளியே. அவருக்கான தண்டனை விவரம் ஜூலை 29-ந் தேதி அறிவிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பை ஷாஹ்சத்தின் உறவினர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். மேலும் காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் தற்போதும் இந்த என்கவுன்ட்டர் போலியானதுதான் என்று சாடியுள்ளார். முன்பும் இதே கருத்தையே திக்விஜய்சிங் கூறியிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி இக்கருத்தை நிராகரித்துள்ளது.
ஆனால் டெல்லி சட்டசபை தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறவே காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்று பாஜக சாடியுள்ளது.












Click it and Unblock the Notifications