இஷ்ரத் என்கவுன்ட்டர் வழக்கு- பிபி பாண்டேவை கைது செய்ய தடை! கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!

2004ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள் என்று மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான், ப்ரனேஷ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோகர் ஆகிய 4 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த 4 பேரும் அப்பாவிகள் என்றும் குஜராத் போலீசார் நடத்தியது போலி என்கவுன்ட்டர் என்றும் புகார்கள் எழுந்தன
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சிபிஐ விசாரணையில் ஐ.பி. மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரி ராஜேந்திர குமாருக்கும் இந்த போலி என்கவுன்ட்டரில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் அகமதாபாத் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அண்மையில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில், அகமதாபாத் புறநகரில் குஜராத் போலீசார் 4 பேரை சுட்டுக் கொன்றது போலி என்கவுன்ட்டர். இந்த போலி என்கவுன்ட்டரை குஜராத் போலீசாரும் மத்திய புலனாய்வு அமைப்பான ஐபியும் இணைந்து மேற்கொண்டன. போலீஸ் அதிகாரிகள் டிஜி வன்சாரா, பி.பி. பாண்டே , தருன் பரோட், பார்மர், அமின் மற்றும் ஐபி அதிகாரி ராஜேந்திர குமார் ஆகியோர் மீது சிபிஐ கொலைக் குற்றம்சாட்டியது.
இதில் போலீஸ் அதிகாரி பிபி பாண்டே நீண்டகாலமாக தலைமறைவாக இருந்து வருகிறார். இதனிடையே அவர் தம் மீதான குற்றச்சாட்டை எதிர்த்தும் தம்மை கைது செய்ய தடை கோரியும் அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் போது விசாரணை நீதிமன்றத்தில் பிபி பாண்டேவை 2 நாட்கள் கைது செய்ய இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், திங்கள்கிழமையன்று அவர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications