நீடிக்கும் கனமழை… உதகை, கூடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரு தினங்களுக்கு விடுமுறை
உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்கு மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் தாலுகாக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக உதகை, மைசூர் சாலையில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். முறிந்து விழுந்த மரங்கள் மின்சார டிரான்பார்மரில் விழுந்த காரணத்தினால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மரங்களை அகற்றுவது, மின்இணைப்பை சரிசெய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மழையால் இப்பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை, கூடலூர் உள்ளிட்ட 4 தாலுகாக்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வால்பாறையிலும் கனமழை கொட்டி வருவதால் அங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணையான சோலையாறு அணை நிரம்பி வழிகிறது.












Click it and Unblock the Notifications