தயாளு அம்மாள் உடல்நிலையை பரிசோதித்தது டெல்லி மருத்துவர்கள் குழு!
தகுதியற்ற யூனிடெக் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் பெற்றதற்கு ஆதாயமாக ரூ200 கோடி பணம் கலைஞர் டிவிக்கு கைமாறியது என்பது சிபிஐயின் வழக்கு. இந்த வழக்கில் கலைஞர் டிவியின் ஷரத், கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தனர். இதே வழக்கில் கலைஞர் டிவியின் ராஜேந்திரன், அமிர்தம் ஆகியோர் சிபிஐ தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜாரகி சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கில் கலைஞர் டிவியில் 60% பங்குகளை வைத்திருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளையும் சிபிஐ சாட்சியாக சேர்த்தது. இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிகக் வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
ஆனால் தமக்கு மறதி நோய் இருப்பதாலும் உடல்நிலை குறைவு ஏற்பட்டிருப்பதாலும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் தயாளு மனுத்தாக்கல் செய்தார். இது தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரிக்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய அறிவுறுத்தியது.
இதனால் தயாளு அம்மாள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் சென்னை சென்று தயாளுவின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை தாககல் செய்ய உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு இன்று காலை சென்னை வந்தடைந்தது. அக்குழு கோபாலபுரம் சென்று தயாளு அம்மாளின் உடல்நிலையை பரிசோதித்து. இந்த பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன் பின்னரே ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் ஆஜராவாரா? இல்லையா? என்பது தெரிய வரும்.