ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் 4 பேர் கைது?

நேற்று மாலை இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் கட்டா ஷாகுல், பஷீர், குட்டி, பாசில் என்று போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 19ம் தேதி சேலத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்த நிலையில், பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகியோர் இந்தக் கொலையில் தொடர்பு கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸார் படத்தை வெளியிட்டு அறிவித்தனர்.
மேலும் பீர் முகம்மது, கிச்சன் புகாரி, பஷீர் ஆகியோர் குறித்தும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருந்தன. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சிலருக்கு ரமேஷ் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கிச்சின் புகாரியின் கூட்டாளிகளான கட்டா ஷாகுல், பஷீர், குட்டி, பாசில் ஆகியோரைப் போலீஸார் கண்காணித்து வந்தனர். நேற்று மாலை அவர்களைப் போலீஸார் கைது செய்ததாகவும், 145 டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications