பட்டாசுத் தொழிற்சாலை விபத்து; பள்ளி மாணவர் உள்பட 3 சிறுவர்கள் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10ம் வகுப்பு மாணவர் உள்பட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த ராஜந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சண்முகம் (48). இவர், இலுப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள நிலத்தில் சிறிய அளவிலான பட்டாசுத் தொழிற்சாலையை 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இத்தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை 4 பேர் தொழிற்சாலையில் பட்டாசுத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் நால்வரில் ஒருவர் மட்டும் மதிய உணவிற்காக வெளியில் சென்றிருந்தார்.
மாலை 4 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுத் தொழிற்சாலை வெடித்துச் சிதறியது. பணியில் இருந்த சுபாஷ் (14)ஐயப்பன் (14)ஆகியோர் அதே இடத்தில் உடல் சிதறி இறந்தனர். இருவரின் சடலங்களும் தொழிற்சாலையில் இருந்து சுமார் 200 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டிருந்தன.படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சின்னராஜ், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஐயப்பன், அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஞாயிறன்று இந்த பட்டாசு தொழிற்சாலைக்கு பள்ளி மாணவர்களும், சிறுவர்களும் பணிக்கு வருவார்களாம்.
தகவலறிந்த ராஜந்தாங்கல், இலுப்பந்தாங்கல், வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் கூடினர். அப்போது பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளரை உடனே கைது செய்யக்கோரி திருவண்ணாமலை-விழுப்புரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். பட்டாசுத் தொழிற்சாலையை நடத்த அனுமதிக்கக் கூட்து என அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி, உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சிறுவர்களை பணியில் அமர்த்தியது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்தார்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், விபத்தில் இறந்த மூவரது குடும்பத்தினருக்கும் தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே, பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் சண்முகத்தைப் போலீசார் கைது செய்து விபத்துக்கான காரணம் குறித்தும், சிறுவர்களை பணியில் அமர்த்தியது ஏன் என்பது குறித்தும் விசாரித்து மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications