மேட்டூர் அணை நீர்மட்டம்100 அடி!... கடல்போல காட்சி தரும் அணை!!
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1 லட்சத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கரையோரப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தினால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, மெயின் அருவி, சினிபால்ஸ் அருவிகள் இருந்த சுவடே தெரியாத அளவிற்கு கடல் போல் காட்சி அளிக்கிறது.
இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. பாசனத்திற்கு நீர்திறக்கப்படாத நிலையில், அணைக்கு வரும் நீர் முழுவதும் சேமிக்கப்படுவதால் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரியில் வெள்ளம்
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நொடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து சனிக்கிழமை இரவு விநாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக இருந்தது

10 ஆண்டுகளுக்கு பின்
கடந்த 2003-ம் ஆண்டு கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1 லட்சத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது.

100 அடியை எட்டியது
சனிக்கிழமையன்று காலை 90 அடியாக இருந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து ஞாயிறன்று இரவு 11 மணியளவில் 100 அடியை எட்டியது. தண்ணீர் 16 கண் பாலத்தை தொட்டுக்கொண்டு கடல் போல காட்சியளிக்கிறது. இதனையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

62 வது முறை
ஜூன் மாதம், 25ம் தேதி, 15 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் 33 நாட்களில் 100 அடியாக உயர்ந்து. மேட்டூர் அணை கட்டி, 79 ஆண்டுகளில் 100 அடியை எட்டுவது 62 வது முறையாகும்.

மொத்த நீர்மட்டம், 120 அடி.
மேட்டூர் அணையின் மொத்த நீர் கொள்ளளவு 120 அடியாகும். 2010 டிசம்பர், 2ம் தேதி, 39வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை அதாவது 120 அடியை எட்டியது. கடந்த, 2011, 2012 ஆகிய இரு ஆண்டுகள், வறட்சியால் அணை முழுவதுமாக நிரம்பவில்லை. நடப்பாண்டு அதிக அளவில் தண்ணீர் வருவதை அடுத்து சில தினங்களில் 40 வது முறையாக மேட்டூர் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடல்போல
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்து வருவதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் அழகினை ரசிப்பதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். அவர்களை போலீசார் அருவி பக்கம் செல்லாதவாறு நடைபாதையில் தடுப்பு அமைத்து தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஒகேனக்கல்லில் இதுபோன்ற வெள்ளத்தை பார்த்தது இல்லை என்று சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தண்டோரா எச்சரிக்கை
காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் அங்கு முகாமிட்டு நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நேற்று ஒரேநாளில் நீர்மட்டம் இரண்டு அடியும், நீர் இருப்பு மூன்று டி.எம்.சி.யும் அதிகரித்துள்ளது. 12 நாளில் அணை நீர்மட்டம் 37 அடியும், நீர் இருப்பு 37 டி.எம்.சி.,யும் அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியை தொடும் போது, நீர்இருப்பு 64.840 டி.எம்.சி.,யாக இருக்கும்.












Click it and Unblock the Notifications