ஸ்பெக்ட்ரம் வழக்குகளை பிற கோர்ட்டுகள் விசாரிக்க விதித்த தடையை நீக்க வலியுறுத்தல்!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்குகளை சிபிஐ நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றமும் விசாரிக்கக்கூடாது என்று 2011-ஆம் ஆண்டில் விதித்த தடையை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக ஆஜராகும்படி டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனை எதிர்த்து அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அத்துடன் இந்த வழக்கில் தங்கள் மீது சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கனிமொழி, ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் முன்பு நேற்று விசாரணை நடைபெற்றது.
அனில் அம்பானி தரப்பு வாதம்
அப்போது அனில் அம்பானி சார்பில் சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி, ஸ்பெக்ட்ரம் வழக்குகளை வேறு நீதிமன்றங்கள் விசாரிக்கக்கூடாது என்று 2011-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதனால் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்றார். மேலும் அனில் அம்பானியிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பே சிபிஐ விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது. தற்போது புதிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகக் கூறி, வழக்கு விசாரணை முடிவடையும் தருணத்தில் மீண்டும் அவரை சாட்சியாக விசாரிக்க நீதிமன்றத்துக்கு அழைக்க வேண்டும் என சிபிஐ கோருகிறது. இதில் இருந்தே, ஆதாரங்கள் கிடைக்காமல், சாட்சிகளிடம் இருந்து ஏதாவது கிடைக்குமா? என்று சிபிஐ தத்தளிப்பது புரிகிறது என்றார்
ஜெத்மலானி காட்டம்
இதேபோல் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால் தரப்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி, வழக்கமாக அரசுத் தரப்பு வழக்குரைஞர்களை மத்திய, மாநில அரசுகள்தான் வழக்குகளில் பணியமர்த்தும். ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞரை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. அதனால், அதிபரைப் போல் அந்த வழக்குரைஞர் செயல்படுகிறார் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த மனுக்கள் மீதான விசாரணையை நாளை மறுநாளைக்கு ஒத்தி வைத்தனர்.
இதனிடையே ஸ்பெக்ட்ரம் வழக்கில் எஸ்ஸார் டெலிஹோல்டிங்ஸ் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை ஆ. ராசா உள்ளிட்டோருக்கு எதிராக நடத்தப்படும் வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இம் மனுவுக்கு ஆகஸ்ட் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications