ஸ்டெர்லைட் ஆலையை மூட இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

நச்சுவாயு வெளியேற்றத்தால் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த மார்ச் மாதம் 30- ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆலையை தற்காலிகமாக இயக்கலாம் என்று டெல்லி பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.
ஸ்டெர்லைட் ஆலையை இயக்காலாம் என்ற பசுமைத்தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஜெகதீஷ்சிங் கெஹர் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி அன்று அதிக அளவில் நச்சு வாயு வெளியேறியதால் பொது மக்களுக்கு மூச்சுத்திணறலும், இயற்கை உபாதைகளும் ஏற்பட்டன. அந்த ஆலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சல்பர் டை ஆக்சைடு பயன்படுத்தப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.
இதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்ட அந்த ஆலையை மூடுவதற்கு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டது. தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம், அந்த ஆலையை தற்காலிகமாக இயக்குவதற்கு அனுமதி வழங்கி உள்ளது.இதற்கிடையில், ஆலையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட 4 பேர் கொண்ட வல்லுநர் குழு, 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்து உள்ளது. எனவே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு வரும்வரை ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
இரு தரப்பு வாத்தையும் கேட்ட நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 5ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications