119 வயசு, உலகத்துலயே வயசான பாட்டி தென்னாப்பிரிக்கால இருக்காங்க...
ஜோஹன்னஸ்பர்க்: பொதுவா எல்லாரும் தங்களோட வயச குறைச்சுச் சொல்லத்தான் ஆசைப்படுவாங்க. ஆனா, சமீபகாலமா நிறைய தாத்தா, பாட்டிங்க நாந்தான் உலகத்துலயே வயசானவன்ங்கனு வாலண்டியரா வந்து சொல்றாங்க.
இதுவரைக்கும் ஜப்பானைச் சேர்ந்த 115 வயது மிசாவேர் ஒக்காவா தான் உலகிலேயே அதிக வயதானவர்னு சாதனைப் புத்தகமான கின்னஸ்ல இடம் பிடிச்சிருக்கார்.
ஆனா, இப்போ, ‘இல்ல..இல்ல.. இவர் தான் உலகிலேயே மிகவும் வயதானவர்னு தென்னாப்பிரிக்காவுல ஒரு பாட்டியைக் காட்டுகிறது அந்நாட்டு அரசு.
பாட்டிக்கெல்லாம் பாட்டி...
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூரில் வாழ்ந்துவருபவர் ஜொஹன்னா மசிபுகோ. தற்போது இவருக்கு 119 வயதாவதால், இவரே உலகில் அதிக வயதானவர் என அறியப்பட்டுள்ளாராம்.
வயது மூப்பு சான்றிதழ்...
ஜோஹன்னாவின் சான்றிதழ்களில் அவர் மே11ம் தேதி 1894ம் ஆண்டு பிறந்தவராகக் குறிக்கப்பட்டுள்ளது. இதுவே, இவரது வயது மூப்புக்கான சான்றாக எடுத்துக் கொள்ளப் பட இருக்கிறது.
முத்துக்கு முத்தாக...
ஜோஹன்னேயின் உடன் பிறந்தவர்கள் பத்து பேர். ஆனால், இவரே அனைவருக்கும் மூத்தவராம். இவருக்கு மொத்தம் ஏழு பிள்ளைகளாம். அதில் ஐவர் இறந்து விட, இவர் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்ற தனது 77 வயது மகனுடன் வசித்து வருகிறார்.
திடகாத்திர உடல்...
இந்தத் தள்ளாத வயதிலும் தானே சமைத்து, துவைத்து என தனக்கான வேலைகளை தானே கவனித்துக் கொள்கிறாராம்.
டிவி பிரியை...
இன்னும் கண் பார்வை தெளிவாக இருப்பதால், டிவி நிகழ்ச்சிகளை நன்கு ரசித்துப் பார்க்கிறாராம் ஜோஹன்னே. ஆனால், ரொம்ப நேரம் நிற்க மட்டும் முடிவதில்லையாம்.
பாட்டி... நல்ல பாட்டி
தென்னாப்பிரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக இவரது சான்றிதழ்களை இன்னும் சரிபார்க்காத போதும், பத்திரிக்கைகள் இவர் தான் வயது முதிர்ந்த பாட்டி என அடித்துக் கூறுகின்றன்.
பிரான்ஸ் தாத்தா...
இதற்கு முன்னர், அதிக வயதானவராகக் குறிப்பிடப்பட்ட ஜீன் கால்மென்ட் என்ற பிரான்ஸ் தேசத்தவர் தன்னுடைய 122-வது வயதில் கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி இறந்துபோனார்.
இந்தியன் தாத்தா...
சமீபத்தில், இந்தியாவைச் சேர்ந்த காஷ்மீரைச் சேர்ந்த பெரோஸ் உன் மிர் என்ற தாத்தா தனக்கு 141 வயதாவதாகவும், தனது மனைவி தன்னை விட 60 வயது இளையவர் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.