ஆந்திரா முதல்வராகிறார் சிரஞ்சீவி?: சோனியா அதிரடி
ஹைதராபாத்: ஆந்திரா பிரிவினை விவகாரத்தில் முதல்வர் கிரண்குமார் ஒத்துழைக்காத பட்சத்தில் அவரை நீக்கிவிட்டு மத்திய அமைச்சர் சிரஞ்சீவியை முதல்வராக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெகன்மோகன் ரெட்டி, சந்திர பாபுநாயுடு இருவரையும் வீழ்த்த சிரஞ்சீவிதான் சரியான நபர் என்பதால் அவரை முன் நிறுத்துகிறார் சோனியா.
ஆந்திரா பிரிவினையை தடுக்க முதல்வர் கிரண்குமார் ரெட்டி பல வழிகளில் முயற்சி செய்தார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி தெலுங்கானாவை சோனியா காந்தி உருவாக்கியுள்ளார்.
மத்திய அரசின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி பதவி விலக திட்டமிட்டார். கடந்த வாரமே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமரசம் செய்ததன் பேரில் அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.
ஒத்துழைப்பு கிடைக்குமா?
தெலுங்கானா அமைக்க ஐ.மு.கூட்டணி கட்சிகளும், காங்கிரஸ்சும், ஒத்துக் கொண்டுவிட்டன. ஆனால் தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை ஆந்திரா சட்ட சபையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டியதுள்ளது. இந்த நடவடிக்கைக்கு முதல்வர் கிரண்குமார் ரெட்டி முழுமையான ஒத்துழைப்பு கொடுப்பாரா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
சிரஞ்சீவி தலைமையில்
கிரண்குமாரும், ஆந்திரா காங்கிரஸ் அமைச்சர்களும் ஏதேனும் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களை ஓரம் கட்டிவிட்டு, புதிய தலைமையை கொண்டு வர காங்கிரஸ் தலைவர் சோனியா திட்ட மிட்டுள்ளார். அது சிரஞ்சீவி தலைமையில் அமையும் என்று கூறப்படுகிறது.
சாதி அரசியல் சாதகம்
பிரிக்கப்பட்ட ஆந்திராவில் கபு சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சிரஞ்சீவி இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்.
எனவே சிரஞ்சீவியை ஆந்திராவின் புதிய முதல்வர் ஆக்குவதன் மூலம் கபு சமுதாயத்தின் ஓட்டுக்களை கவர முடியும் என்று சோனியா நினைக்கிறார். எனவே சாதி அரசியலையும் காங்கிரசுக்கு சாதகமாக திருப்ப சோனியா ஆலோசித்து வருகிறார்.
எம்.பி தொகுதியும் அதிகம்
பிரிக்கப்பட்ட ஆந்திராவில் மொத்த 25 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகளில் கபு சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். மற்ற 9 தொகுதிகளிலும் அவர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
கபு இனத்தவருக்கு அடுத்த படியாக, பிரிக்கப்பட்ட ஆந்திராவில் கம்மா இனத்தவர்கள் கணிசமான அளவுக்கு உள்ளனர். கம்மா இன மக்கள் பாரம்பரியமாக தெலுங்கு தேசம் கட்சிக்கே வாக்களித்து வருகிறார்கள்.
2014 முதல்வர் வேட்பாளர்
அடுத்த சட்டமன்ற தேர்தலில் சிரஞ்சீவியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் பட்சத்தில் கபு இனத்தவர்கள் ஓட்டு காங்கிரசுக்கு கிடைக்கும் என்று வியூகம் வகுக்கப்படுகிறது. மேலும் கபு மற்றும் கம்மா இன மக்களிடம் நேரடி போட்டி உருவாகும்.
இருவரை வீழ்த்த திட்டம்
ஏற்கனவே தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி கட்சியை சேர்த்து தெலுங்கானாவில் வலுவாக கால் ஊன்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பிரிக்கப்பட்ட ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திர பாபுநாயுடு இருவரையும் வீழ்த்த சிரஞ்சீவியை முன் நிறுத்துகிறார்கள்.
கிரண்குமார் அதிர்ச்சி
சோனியாவின் இந்த திட்டத்தால் தெலுங்கானா, ஆந்திரா இரண்டிலும் காங்கிரசுக்கு பலம் கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதேசமயம் சோனியாவின் இந்த அதிரடி திட்டத்தை அறிந்து முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.