ஹைதராபாத் நிர்வாகத்தை தெலுங்கானா மாநிலம்தான் பார்த்துக்குமாம்...!
ஹைதராபாத்: ஹைதராபாத், இரு மாநிலங்களுக்கு 10 வருடத்திற்கு பொது தலைநகராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டாலும் கூட, ஹைதராபாத் நகர நிர்வாகத்தை தெலுங்கானா மாநிலம்தான் பார்க்கும் என்று தெரிகிறது. மத்திய அரசு இப்படித்தான் யோசித்து வைத்துள்ளதாம்.
தெலுங்கானா பிராந்திய மக்களின் நீண்ட கால கோரிக்கையைத் தொடர்ந்து தற்போது ஆந்திராவை இரண்டாகப் பிரிக்க மத்திய அரசு முடிவெடுத்து விட்டது.
இதற்கு ஆந்திர மாநிலத்தின் இதர பகுதி மக்கள் கடும் எதிர்ப்பும், ஆட்சேபனையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் வாக்கு வங்கியை மனதில் கொண்டு தெலுங்கானா தனி மாநில முடிவை எடுத்துள்ளது காங்கிரஸ்.
பத்து வருடங்களுக்கு ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம் யார் பொறுப்பு...
இந்த பத்து வருட காலத்திற்கு ஹைதராபாத்தை யார் நிர்வகிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எல்லை தெலுங்கானாவில்தானே...
ஹைதராபாத் நகரானது, தெலுங்கானா பகுதியில்தான் உள்ளது. எனவே தெலுங்கானா மாநிலத்தின் வசம்தான் அதன் நிர்வாகம் இருக்கும். அதுதான் நடைமுறைக்கும் சரிவரும் என்று மத்திய அரசு கருதுகிறதாம்.
வாடகை வீட்டில் இருப்பது போல...
எனவே இந்த 10 வருட காலமும் ஆந்திராவின் தலைநகராக ஹைதராபாத் இருந்தாலும் கூட கிட்டத்தட்ட வாடகை வீட்டில் இருப்பது போலத்தான் அவர்களின் நிலை இருக்கும்.
புது தலைநகர் விரைவில்
10 வருடத்திற்குப் பிறகு நிச்சயம் ஹைதராபாத் தெலுங்கானாவுக்குத்தான் தனிப்பட்ட சொத்தாக மாறும். எனவே ஆந்திராவுக்கு தனித் தலைநகரை அதற்குள் உருவாக்கும் நடவடிக்கைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.