உத்திரமேரூர் அருகே சோகம்: ஏரியில் மூழ்கி 3 குழந்தைகள் பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற 3 குழந்தைகள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூரை அடுத்த கல்யாணமேடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு லதா (வயது 13), கீதா (12), என்ற மகள்களும், திருமலை (9) என்ற மகனும் இருந்தனர்.
இவர்கள் 3 பேரும் உத்திரமேரூர் ஒன்றியம் காட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை லதா, கீதா, திருமலை ஆகிய மூவரும் பள்ளிக்குச் செல்லும் முன்பு குளிப்பதற்காக அருகில் உள்ள வேடப்பாளையம் ஏரிக்கு சென்றனர்.
ஏரியில் இறங்கி குளித்த போது 3 பேரும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். மூவருக்குமே நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஏரிக்கு குளிக்க சென்ற குழந்தைகள் திரும்பி வராததால் தந்தை நடராஜன் தேடிச் சென்றார். அப்போது 3 பேரையும் காணவில்லை. ஆனால் அவர்களது ஆடைகள் ஏரிக்கரையில் கிடந்தன.
இதையடுத்து நடராஜனும், அந்த பகுதி மக்களும் ஏரிக்குள் இறங்கி தேடினார்கள். அப்போது லதா, கீதா, திருமலை ஆகிய 3 பேரையும் சடலமாக மீட்டனர். பின்னர் உடல்களை வீட்டுக்கு எடுத்து சென்று விட்டனர். தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. பாலசந்சந்தர், மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பலியான 3 குழந்தைகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். ஆனால் அதற்கு நடராஜன் மற்றும் உறவினர்கள் மறுத்துவிட்டனர். எங்களது குழந்தைகள் இறந்துவிட்டனர். நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது.












Click it and Unblock the Notifications