திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் குண்டு வெடிக்கும்... கடிதத்தால் பரபரப்பு
திருச்சி: திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆகஸ்ட் 3ம் தேதி வெடிகுண்டு வெடிக்கும் என்று வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அலுவலகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஒரு இன்லேன்ட் கடிதம் வந்தது. அதில் ரங்கநாதர் கோவில் நிர்வாகத்தின் கீழ் வரும், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் வெடிகுண்டு வைத்துள்ளோம். அது ஆகஸ்ட் 3ம் தேதி வெடிக்கும். இந்த குண்டுவெடிப்புக்கு ஏற்பாடு செய்தவர் கருணா இப்படிக்கு சுல்தான் என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் நேற்று இரவு கோவிலுக்கு விரைந்து சென்றனர். போலீஸ் கமிஷனர் அபினவ் குமார் முன்னிலையில் மோப்ப நாய்கள் சகிதம் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் வீரர்கள் தீவிர சோதனையில் இறங்கினர். ஆனால் தீவிர சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை.
எனவே கடிதம் புரளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த போலீஸ் சோதனையால் கோவிலில் பூஜைகள் பாதிக்கப்பட்டது. மேலும் கோவிலிலும் பரபரப்பு ஏற்பட்டது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருணா என்ற பெயருக்குரியவர் சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வருகிறார். அவரிடமும் போலீஸார் விசாரித்தனர். ஆனால் அவர் மீது குற்றம் இருப்பதாக தெரியவில்லை. எனவே சைக்கில் ஸ்டாண்ட் ஒப்பந்தம் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஷமிகள் யாரேனும் இப்படி கடிதம் அனுப்பியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இருப்பினும் இந்தக் கடிதத்தை அலட்சியமாக எடுக்காமல் போலீஸார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications