பாஜகவின் தேர்தல் பிரசார கண்காணிப்பு, திட்டமிடல் பொறுப்பாளராக வெங்கையா நாயுடு!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார கண்காணிப்பு மற்றும் திட்டமிடல் பொறுப்பாளராக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரசார குழுத் தலைவர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் கலந்ஹ்டு கொண்டனர்.
இக் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு தேர்தல் பிரசார குழுவில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன. தேர்தல் பிரசார கண்காணிப்பு மற்றும் திட்டமிடுதல் ஆகியவற்றுக்கு பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் இளைஞர்களை அதிகம் கவருவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 100 பேரணிகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களைக் கவரும் வகையிலான முதல் பேரணி ஹைதராபாத்தில் வரும் 11-ந் தேதி நடைபெற உள்ளது.