ஆந்திராவில் பிடித்த படிப்பில் சேர சீட் கிடைக்காததால் மாணவி தற்கொலை
அனந்தபூர்: ஆந்திராவில் விரும்பிய பாடப் பிரிவில் சேர்ந்து படிக்க சீட் கிடைக்காததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள அனந்தசாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லேஷ்வரி. பள்ளிப் படிப்பை முடித்த அவர் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் படிப்பில் சேர விரும்பினார். ஆனால் அவர் நுழைவுத் தேர்வில் சரியான மதிப்பெண்கள் பெறாததால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை.
இதனால் மனமுடைந்த மல்லேஷ்வரி பூச்சிமருந்தை குடித்தார். உயிருக்கு போராடிய அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார்.
இதையடுத்து மல்லேஷ்வரியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். அவர் தனது மனுவில், சீட் கொடுக்க லஞ்சம் கேட்டனர். நான் தர மறுத்தவுடன் சீட் தர மறுத்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் யார் லஞ்சம் கேட்டது, எவ்வளவு கேட்டார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.