இன்று காலை தூக்கு.. நேற்று இரவில் தடை விதித்த தலைமை நீதிபதி சதாசிவம்!

வழக்கு என்ன?
மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தை சேர்ந்த மகன்லால் பரேலவுக்கு 2 மனைவிகள். இவர்களுடன் பரேலாவுக்கு சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் அவர் தமது மகள்கள் ஜமுனா, பூல்கன்வார் , ஆர்த்தி , சவீதா, லீலா ஆகியோரை ஈவிரக்கமின்றி கோடரியால் தலையை துண்டித்து படுகொலை செய்தார். இவர்கள் அனைவருக்குமே 1 முதல் 6 வயதுதான்.
இந்த வழக்கில் 2010-ம் ஆண்டு ஜூன் 11-ந் தேதி பரேலாவுக்கு தூக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை மத்திய பிரதேச அரசும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன. அவர் தாக்கல் செய்த கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 22-ந் தேதி நிராகரித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை அவரை தூக்கிலிடுவதற்கான கறுப்பு கட்டளையை செஹோர் மாவட்ட செசன்சு நீதிமன்றம் பிறப்பித்தது. இதனால் அவரை ஜபல்பூர் மத்திய சிறையில் தூக்கிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு தலைமை நீதிபதி பி. சதாசிவம் வீட்டில் இந்த தூக்கு தண்டனைக்கு தடை கோரி ஒரு மனு கொடுக்கப்பட்டது. அவரும் தமது வீட்டில் இருந்தபடியே இன்று காலை தூக்கிலிடுவதற்கு தடை விதித்தார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இன்று காலை இந்த விசாரணை நடைபெற்ற போது மறு உத்தரவு வரும் வரை பரேலாவை தூக்கிலிட தடை விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications