நெல்லை மாவட்டத்தில் 4 அணைகள் நிரம்பின-நெல் சாகுபடி தீவிரம்
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் 4 அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் நெல் சாகுபடி செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்காக அணைகளில் சேகரிக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஜீன் முதல் ஆகஸ்ட் வரை தென் மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்யும்.

சரியான நேரத்தில் ....
கடந்த நான்கு ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்த நிலையில் இந்தாண்டு ஜூன் 1ம் தேதி முதல் இன்று வரை சீரான இடைவெளியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் 4 அணைகள் நிரம்பி காணப்படுகிறது.

நிரம்பிய அணைகள்
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 129.10 அடியாக இருந்தது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 138.12 அடியாக உள்ளது. ராமநதி, கடனாநதி, குண்டாறு அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்ட நிலையில் 132.2 அடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணையும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நிரம்பியது.

உபரிநீர் வெளியேற்றம்
இதனால் இந்த அணைகளில் உபரி நீர் மறுகால் பாய்கிறது. குண்டாறு, அடவி நயினார் அணைகள் நிரம்பி காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரில் சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி
பொதுவாக இந்த அணைகள் வடகிழக்கு பருவமழையின் போது தான் நிரம்பும். ஆனால் இந்தாண்டு தொடர் மழை காரணமாக குறிப்பிட்ட காலத்திற்குள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications