டோல்கேட் தாக்குதல் சம்பவம்: அன்புமணிக்கு சென்னை ஹைகோர்ட் முன்ஜாமீன்!

சேலத்தில் இருந்து வந்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் கார் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை கடக்கும் முயன்றபோது தானியங்கி டோல்கேட் மூடிக்கொண்டது. சுங்க கட்டணம் அல்லது வி.ஐ.பி. பாஸ் காட்டினால் தான் கேட் திறக்கும் என டோல்கேட் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதை ஏற்க மறுத்த பா.ம.க.வினர் டோல்கேட்டை திறக்க வேண்டும் என்று கூறி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
பிரச்சனை பெரிதாகி அன்புமணி ராமதாஸுடன் வந்த பா.ம.க.வினர் சிவகொழுந்து என்ற டோல்கேட் ஊழியரை தாக்கியதுடன் அதை தடுக்க வந்த மேலும் இரண்டு ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். மேலும், டோல்கேட்டில் இருந்த கண்ணாடி, கதவுகள், 3 கம்யூட்டர்களையும் பா.ம.கவினர் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் உள்பட பா.ம.க.வினர் மீது விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, விழுப்புரம் டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான போலீஸ் படையினர் இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் அன்புமணி ராமதாஸை கைது செய்வதற்காக சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த அன்புமணி ராமதாஸின் உதவியாளர் மற்றும் பா.ம.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அங்கிருந்து தப்பித்துவிட்டார்.
இந்த நிலையில் அன்புமணி சார்பாக வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வாலை சந்தித்து, முன் ஜாமீன் கோரும் மனுவை அவரச மனுவாக கருதி விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் நீதிபதி ராஜேந்திரன் இதனை விசாரிப்பார் என உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸின் முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் விசாரணைக்கு வந்தது அப்போது மனுவை விசாரித்த நீதிபதி அன்புமணிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
2 லட்சம் ரூபாய் வங்கியில் பிணைத்தொகையாக செலுத்தவேண்டும் எனவும். 2 நாட்கள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications