ஜம்மு காஷ்மீரில் இன்று காலை மீண்டும் பாக். தாக்குதல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர். இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது.
இதன் பின்னரும் தொடர்ந்தும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று காலை 11.30 மணியளவில் பூஞ்ச் பகுதியில் நூர்கோட், நகர்கோட், மும்தாஜ் உள்ளிட்ட 13 இந்திய நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படையின் வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதற்கு இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை மற்றும் இரவு 9.50 மணிக்கும் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் ராணுவத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று காலை 6 மணியளவில் பூஞ்ச் டேக்வார் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications