விதிமீறி சுங்கவரி வசூல் செய்வதை எதிர்த்து வழக்கு: நாளை இறுதி விசாரணை
இதுதொடர்பாக மதிமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தூத்துக்குடியையும், நெல்லையையும் இணைக்கும் வகையில் இரு நகரங்களுக்கு இடையே நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்குவழிச்சாலைப் பணிகள் தொடர்பான தேசிய நெடுஞ்சாலைத் துறையின் நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 20-09-2012ல் டெல்லியில் நடந்தது.
இந்த கூட்டத்தில்,தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் குமாரகிரி, கூட்டுடன் பகுதியில் சுங்கச்சாவடி மையம் அமைத்து வரிவசூல் செய்துகொள்ள அனுமதி அளித்து அதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் குமாரகிரி பஞ்சாயத்திற்குட்பட்ட கூட்டுடன்காடு பகுதியில் சுங்கவரி வசூல் மையம் அமைத்து வசூல் செய்வதற்குரிய இடத்தினை உடனடியாக கையகப்படுத்தி கொடுக்குமாறு,டெல்லியிலுள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிக்கு 2-12-2012ல் கடிதம் மூலம் தெரிவித்தார். ஆனால் இடத்தினை கையகப்படுத்தி கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அப்போது எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இதில் ஏற்பட்ட தாமத்தை தொடர்ந்து கடந்த 22-02-2013 முதல் புதுக்கோட்டை அருகேயுள்ள தட்டப்பாறை விலக்கில் தற்காலிகமாக சுங்கவரி வசூல் மையத்தினை அமைத்து 3மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களுக்கு வரிவசூல் செய்து கொள்வதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஈகிள் இன்பரா இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி அளித்தது.
இந்த அனுமதியின்பேரில் 5-04-2013 முதல் புதுக்கோட்டை அருகில் தற்காலிகமாக வரிவசூல் மையம் செயல்பட துவங்கியது. தற்காலிகம் என்ற சொல்லானது நாள் அல்லது வாரக் கணக்கைத்தான் குறிக்குமே தவிர மாதம் அல்லது வருடம் என்பது தற்காலிகமாகாது. ஆனால் புதுக்கோட்டை தட்டப்பாறை விலக்கில் அமைக்கப்பட்ட தற்காலிக சுங்கச்சாவடி வசூல் மையமானது நிரத்தர வரிவசூல் மையம் என்ற பெயரில் செயல்பட துவங்கியது.
இதனைக்கண்ட தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை சுற்றுவட்டார பொதுமக்கள், வணிக அமைப்புகள், அரசியல்கட்சிகள், சமூகநலஅமைப்புகள் புதுக்கோட்டையில் வாகனங்களுக்கு வரிவசூல் செய்வதை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், முற்றுகைப்போராட்டம் என பலஅறவழி போராட்டங்களை தொடர்ந்து நடத்தினர்.
இந்த போராட்டங்களுக்கு பிறகு கலெக்டர் ஆஷிஷ்குமார் புதுக்கோட்டை வரிவசூல் மையம் தற்காலிகமாக அமைக்கப்பட்டதுதான். இது 6 அல்லது 8 மாதங்களில் ஏற்கனவே திட்டமிட்டபடி குமாரகிரி, கூட்டுடன்காடு பகுதியில் நிரத்தர வரிவசூல் மையமாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
ஆனால், புதுக்கோட்டை தற்காலிக சுங்கவரி வசூல் செய்யும் இடத்திற்கு அருகில் நிரத்தரமாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை பார்த்தால் இது தற்காலிகமாக இன்றி நிரத்தர சுங்கவரி வசூல் மையமாக மாறிவிடும் சூழ்நிலை எழுந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், லக்னோவை சேர்ந்த பிரிமியர் கார் சேல்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் புதுக்கோட்டை வரிவசூல் மையத்தில் ஒரு வருடத்திற்கு சுங்கவரி வசூல் செய்வதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை 22&06&2013 அன்று அனுமதி கொடுத்துள்ளது.
இப்படிபட்ட காலகட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுங்கவரி வசூல் மைய ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வரிவசூல் மையம் அடித்து நொறுக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இக்காரணத்தினால் வாகனங்களுக்கு வரிவசூல் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் நிரத்தர வரிவசூல் மையத்திற்கு இடத்தினை கையகப்படுத்தி கொடுப்பதில் ஏற்பட்ட காலதாமதமும், மிகவும் அலட்சியமாக இருந்ததும் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாகும்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் கலெக்டரான ஆஷிஷ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரத்தர வரிவசூல் மையம் அமைப்பதற்கான இடத்தினை வருவாய்த்துறை மூலமாக தேர்வு செய்து கொடுத்துள்ளார். இந்த இடமானது தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு மிக அருகே, முன்பே திட்டமிட்ட பகுதியில் அமைந்து உள்ளது.
இடத்தினை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து கொடுத்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் ஆஷிஷ்குமார் திடீரென பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து புதிய கலெக்டராக ரவிக்குமார் பொறுப்பேற்றுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், தட்டப்பாறை விலக்கு பகுதியிலுள்ள தற்காலிக சுங்க வரிவசூல் மையம் இன்னும் சில தினங்களில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப அங்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பிற்கு ஏற்ப, தற்காலிக வரி வசூல் மையம் அமைந்துள்ள பகுதியில் நான்குவழிச்சாலையின் இருதிசைகளில் மிகபிரமாண்டமாக அறிவிப்புபலகைகள் வைக்கப்பட்டு வருவதுடன், வரிவசூல் பணிகளை கண்காணிக்க தானியங்கி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் வரிவசூல் மையத்திற்கு மேற்கூரை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைப்பார்க்கும் போது தற்காலிக சுங்கவரிவசூல் மையம் நிரத்தரமாக வரிவசூல் மையமாக அதே இடத்திலேயே செயல்படும் என்றே தெரிகிறது.
இந்நிலையில், நான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். இந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, கலெக்டர், மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அந்த பிரமாண வாக்குமூலத்தில், ஏற்கனவே திட்டமிட்டபடி குமாரகிரி, கூட்டுடன் பகுதியில் சுங்கச்சாவடி மையம் அமைக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளது. நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே மாவட்ட நிர்வாகம் இடத்தினை தேர்வு செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இப்படிப்பட்ட சூழலில் இந்த பொதுநல வழக்கு நாளை(13ம் தேதி) இறுதி விசாரணைக்கு வருகிறது.
தற்காலிக வரிவசூல் மையத்தை நிரத்தரமாக மூடிவிட்டு மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து கொடுத்துள்ள குமாரகிரி-கூட்டுடன்காடு பகுதியிலேயே நிரத்தர வரிவசூல் மையம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்தப்பகுதியில் நிரந்தர வரிவசூல் மையம் அமைத்தபிறகுதான் சுங்கவரி வசூல் செய்யப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.