பாகிஸ்தான் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து லோக்சபாவில் தீர்மானம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு நாடாளுமன்ற லோக்சபாவில் கண்டனம் தெரிவித்து இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதில் இந்தியாதான் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்ற லோக்சபாவில் பாகிஸ்தானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தில், பாகிஸ்தானின் தேசிய நாடாளுமன்றமும், பஞ்சாப் மாகாண சபையும் நிறைவேற்றிய தீர்மானங்களை லோக்சபா நிராகரிக்கிறது. இந்திய ராணுவம் மற்றும் இந்திய மக்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அந்த தீர்மானம் தெரிவிக்கிறது. ஆகஸ்ட் 6-ந் தேதியன்று எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவமே.
பாகிஸ்தானுக்கோ பாகிஸ்தானியர்களுக்கோ இந்தியா அச்சுறுத்தல் உள்ள நாடாக இல்லை. அதே நேரத்தில் பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்த பிராந்தியத்துக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு லோக்சபா கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு இந்த சபை வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications