சென்னையில் பூட்டப்படாத வீட்டில் ரூ 23000 திருடிய பள்ளி மாணவர்கள் கைது
சென்னை: சரியாக பூட்டப் படாமல் திறந்து கிடந்த வீட்டில் புகுந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேர் ரூ23000 திருடிய குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த புதனன்று காலை தண்டையார்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் 8ம் மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் மூவர், பள்ளி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள வீட்டில் குடியிருந்த கார்த்திக் என்பவர் சரியாக வீட்டைப் பூட்டாமல் அருகில் உள்ள கடைக்குச் செல்வதைக் கவனித்துள்ளனர் அம்மாணவர்கள்.
உடனே, கார்த்திக்கின் வீட்டிற்குள் புகுந்த அம்மாணவர்கள் அங்கிருந்த மேஜையில் இருந்த ரூ 23000யை தூக்கிக் கொண்டு ஓடி விட்டனர். கடைக்குச் சென்ற கார்த்திக் திரும்பி வந்து பார்த்தபோது, பணம் களவு போனது தெரிய வந்தது. அதிர்ந்து போன கார்த்திக் இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசாரின் தீவிர விசாரணையில் பள்ளி மாணவர்கள் பணம் திருடியதை ஒத்துக் கொண்டனர். புதைத்து வைத்திருந்த பணத்தை திருப்பி எடுத்துக் கொடுத்த பின்னர் மாணவர்கள் மூவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications