தீவிரவாதிகள் தாக்குதலால் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்திருக்கலாம்..: விசாரிக்க கருணாநிதி கோரிக்கை!
சென்னை: மும்பை ஐ.என்.எஸ். சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல் தீவிரவாதிகளின் தாக்குதலால் வெடித்திருக்கக் கூடும் என்பதால் அதுபற்றியும் விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.என்.எஸ். சிந்துரக்சக் என்ற நீர்மூழ்கிக் கப்பல் மும்பைத் துறைமுகத்தில் புதன்கிழமை நள்ளிரவில் வெடித்து சிதறியுள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 18 கடற்படை வீரர்கள் இறந்திருக்கக் கூடும் என ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.

அலட்சியத்துக்கு யார் காரணம்?
அந்தச் செய்தி உண்மையானால், இந்த அவலத்துக்கும் அலட்சியத்துக்கும் யார் காரணம் என்பதையும், எச்சரிக்கை செய்யும் உபகரணங்கள் செயலற்றுப் போனது ஏன் என்பதையும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆராய வேண்டும்.

இந்திய கடற்படைக்கு பெரும் பின்னடைவு
மேலும் அது தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும். இந்த விபத்து இந்தியக் கடற்படைக்கு மிகப் பெரிய பின்னடைவாகும். நீர் மூழ்கிக் கப்பலில் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி தயாரிப்பு வெற்றிகரமாக சில நாள்களுக்கு முன்புதான் நடத்தப்பட்டது. அந்தப் பெருமைக்குரிய சம்பவங்கள் நடந்த சில நாள்களிலேயே இந்தத் துயரச் சம்பவமும் நடைபெற்றுள்ளது.

அலட்சியம் இனி கூடாது
இந்தியக் கடற்படை வரலாற்றில் போரில்லாத காலத்தில் நடைபெற்ற மிக மோசமான விபத்தாகும் இது. இந்திய ராணுவத்தின் பாதுகாப்பில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்பிலும் இந்த அலட்சியம் இனியும் ஏற்படக்கூடாது.

நாசவேலையா? தீவிரவாதிகளின் தாக்குதலா?
நீர் மூழ்கிக் கப்பல் நெருப்பில் வெடித்துச் சிதறியதற்கு நாச வேலை காரணமா என்பதையும் விசாரிக்கப்பட வேண்டும். தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாகவும் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கக் கூடும். எனவே அது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். விபத்தில் இறந்த 18 வீரர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications