கரூர் அருகே ஊழல்... பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு கல்தா!
கரூர் மாவட்டம், குளித்தலை பஞ்சாயத்து யூனியனில் உள்ளது இனுங்கூர் கிராம பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் செல்வராசு, ஆகஸ்ட் 8 ம் தேதி முதல் 16 ம் தேதி வரை ஆய்வு செய்தார்.
அப்போது, பஞ்சாயத்து கூட்டம் முறையாக நடத்தப்படாதது, பஞ்சாயத்து தீர்மானங்களை தன்னிச்சையாக திருத்தங்கள் செய்தது, விதிமுறைகளை பின்பற்றாமல், முன்னுக்கு பின் முரணான ஆவணங்கள் மூலமாக சாலை அமைத்திட போலியாக பட்டியல் தயார் செய்து, ஐந்து லட்சத்து, 23 ஆயிரத்து, 659 ரூபாய் முறைகேடு செய்தது, சிறுமின் விசை பழுது நீக்கம் என்ற பெயரில் 72 ஆயிரத்து, 729 ரூபாயை, தனது பெயரில் காசாக்கியதில் முறைகேடு செய்தது தெரிய வந்தது.
மேலும், கரூர் மாவட்ட கலெக்டர் அனுமதி இல்லாமல், விளம்பரம் செய்து 34 ஆயிரத்து, 700 ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தியது, மின்மோட்டார் மற்றும் பேனல் போர்டு பழுது நீக்கம் செய்ததில் விதிமுறை மீறி ஒரு லட்சத்து, 64 ஆயிரத்து, 405 ரூபாய் செலவினம் மேற்கொண்டது, கிராவல் அடித்தல் மற்றும் முட்புதர்களை அகற்றுதல் என்ற பெயரில் ஒரு லட்சத்து, 87 ஆயிரத்து, 895 ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தியது.
எந்த விதமான ஆதாரமும் இல்லாமல், பொருட்கள் வாங்கி பயன்படுத்தியதில் ஐந்து லட்சத்து, 89 ஆயிரத்து, 468 ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தியது என பல்வேறு முறைகேடுகள் கண்டறிப்பட்டது.
இதனால், இனுங்கூர் பஞ்சாயத்து தலைவர் இளஞ்சியம், துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோரை ஆகஸ்ட் 14 ம் தேதி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி பிறப்பித்துள்ளார்.