ஒடிஷாவில் வேதாந்தா குழுமத்தை அனுமதிக்க கடைசி கிராமசபை கூட்டத்திலும் எதிர்ப்பு!
ராயகடா: ஒடிஷாவில் பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட கடைசி கிராமசபை கூட்டத்திலும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒடிஷாவின் கலஹாண்டி, ராயகடா மாவட்டங்களின் நியாம்கிரி மலையில் பாக்சைட் தாது வெட்டி எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் நியாம்கிரி மலையைப் பூர்வீகமாகக் கொண்ட டோங்க்ரியா கோண்ட் பழங்குடி இனத்தவர் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நிலை உருவானது.
இதற்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. உச்சநீதிமன்றத்திலும் வேதாந்தா குழுமத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கிராமசபைகளே முடிவெடுக்க உத்தரவு!
அத்தீர்ப்பில், நியாம்கிரி மலை என்பது பழங்குடி இனமக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அது அவர்களது கலாசார அடையாளமாக இருக்கிறது. ஆகையால் நியாம்கிரி மலையில் பாக்சைட் தாது வெட்டி எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி கொடுப்பது பற்றி அந்த மலைசார் கிராமசபைகளே முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அனைத்து கிராமசபைகளிலும் எதிர்ப்பு
மேலும் இதற்கான கிராமசபை கூட்டங்களை நடத்தவும் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கிராமசபை கூட்டங்களில் வேதாந்தா குழுமத்துக்கு ஒருபோதும் அனுமதி கொடுக்கக் கூடாது. நியாம்கிரி மலை எங்களது கலாசாரம். அதை வெட்டுவது என்பது எங்களது வழிபாட்டு உரிமையை கைப்பற்றுவதாகும் என்று வலியுறுத்தினர்.
கடைசி கூட்டத்திலும் எதிர்ப்பு
இதன் கடைசிக் கட்டமாக ராயகடா மாவட்டத்தில் ஜராபா கிராமத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வேதாந்தாவின் கதி?
ஒட்டுமொத்தமாக கிராமசபைகள் அனைத்தும் வேதாந்தா குழுமத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஒடிஷாவில் இனி வேதாந்தா குழுமம் பாக்சைட் ஆலையை தொடர்ந்து செயல்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.