குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு, நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள திட்ட திரவ எரிவாயு மையத்தில் பணிபுரிவோர் வேண்டுகோள் கடிதம் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் உங்களின் கவனத்திற்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். தாங்கள் அதை அவர்களுக்கு ஆதரவாக பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி மற்றும் திட்ட திரவ எரிவாயு மையம் அமைக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் சார்பில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
திருவனந்தபுரத்தில் ''இஸ்ரோ'' சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்திய வானியல் தொழில்நுட்பப் பயிலகம் வான்வெளி தொடர்பானவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால், வானியல் மற்றும் திட்ட திரவ எரிவாயு தொடர்பானவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பயிலகம் அமைக்கப்படவேண்டும் என்பது தற்போதைய நிலையில் மிக அவசரமும், முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நமது நாட்டில் வான்வெளி மற்றும் திட்ட திரவ எரிவாயு தொடர்பான நிபுணத்துவம் மிக்கவர்கள் மிகவும் குறைந்த நிலையில் இருப்பதாக எனக்கு தெரியவந்துள்ளது. விமானங்கள் வடிவமைப்பு, ஹெலிகாப்டர் வடிவமைப்பு, அதிவேக விமானங்கள் உருவாக்கம், வான்வெளி தொழில்நுட்ப ஆய்வுகள் சார்ந்த படிப்புகளுக்கு மகேந்திரகிரியில் ஏற்பட இருக்கும் திட்ட திரவ எரிவாயு மையம் தகுதி வாய்ந்த ஒரு அமைப்பாக இருக்கும் என பரிந்துரை செய்கிறேன். அந்த புதிய மையத்திற்குத் தேவையான அளவு நிலமும், தொழில்நுட்ப ஆலோசகர்களும் உள்ளனர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
வானியல் துறையில் ''இஸ்ரோ'' தனது இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் திட்டம் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டு புதிய ஏவுதளம் அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக அந்தக்குழு ஆய்வு செய்தும் வருகிறது.
எனக்குக் கிடைத்துள்ள விரிவான அறிக்கையின்படி தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப் பட்டினம் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க உகந்த இடமாக கருதுகிறேன். பிரெஞ்ச் கயானாவுக்கு அடுத்தபடியாக இந்த பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு ஏற்கனவே சிறந்த இடமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த இடம் பூமத்தியரேகைக்கு மிக அருகில் இருக்கிறது என்பதோடு, இது தொடர்பான வி.எஸ்.எஸ்.சி., எல்.பி.எஸ்.சி. மற்றும் ஐ.ஐ.எஸ்.யு. உள்ளிட்ட பல்வேறு ராக்கெட் ஆய்வு மையங்கள் அதன் அருகருகே அமைந்துள்ளன.
தென்தமிழ்நாடு தொழிற்துறையில் முன்னேற்றம் அடையாமல் இருக்கிறது. இத்தனைக்கும் தேவையான அளவிற்கு அனைத்துத் தகுதிகளும் பூகோள ரீதியாக அமைந்திருப்பதோடு, வல்லமைமிக்க மனித ஆற்றல்களும் அங்கே இருக்கின்றன. எனவே, அந்தப் பகுதி மத்திய அரசின் உரிய கவனத்திற்கு வரவேண்டிய ஒன்றாகும்.
மகேந்திரகிரியில் இந்திய வான்வெளி , திட்ட திரவ எரிவாயு மையம் மற்றும் குலசேகரப் பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் மூலம் அந்த மண்டலமே வளர்ச்சி பெற்ற மண்டலமாக நிச்சயம் மாறும் என்பதோடு நமது நாட்டில் தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திடும் பகுதியாக அது உருவாகும்.
இந்த இரண்டு முக்கித்துவம் வாய்ந்த நிறுவனங்களை அமைப்பது குறித்து உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள உங்களது தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தங்கள் உரிய நடவடிக்கையை முக்கியத்துவத்தின் அடிப்படையில் மேற்கொண்டு உடனடியாக நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications