மாணவனிடம் பாலியல் சித்திரவதை.. 6 மாதமாக மிரட்டி பணம் பறித்த ஊர்க்காவலன் கைது
கான்பூர்: கான்பூரில் 20 வயது மாணவனை பாலியல் சித்திரவதை செய்து பின்னர் அதை வீடியோவில் படமாக்கிக் கொண்டு கடந்த 6 மாதமாக தனது வீட்டில் அடைத்து வைத்து பணம் பறித்து வந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த வீரரின் பெயர் தரம்வீர் சிங். இவர் ஜான்பூரைச் சேர்ந்த 20 வயது பி.டெக் மாணவன் ஒருவருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் அவரை ஏதோ கொடுத்து மயங்க வைத்து பின்னர் பாலியல் பலாத்காரம் செய்தார். அதை வீடியோவிலும் பதிவு செய்தார்.
அதன் பின்னர் அதைக் காட்டி அம்மாணவனை பலமுறை மிரட்டிப் பணம் பறித்தார். இன்டர்நெட்டில் போட்டு விடுவதாக கூறி பணம் பறித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இந்த அக்கிரமம் தொடர்ந்துள்ளது.
மேலும் அந்த மாணவனை தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் அங்கு அடைத்தும் வைத்து சித்திரவதை செய்துள்ளார். கிட்டத்தட்ட ரூ. 4 லட்சம் வரை இப்படிப் பணம் பறித்துள்ளார் தரம்வீர் சிங்.
இந்த நிலையில் அந்த வீட்டிலிருந்து தப்பி வெளி வந்த மாணவன் தனது வீட்டுக்குத் திரும்பினார். பின்னர் குடும்பத்தாரிடம் நடந்ததைக் கூறி அழுதார். அதன் பிறகு குடும்பத்தார் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணை நடத்தி தரம்வீரைக் கைது செய்தனர்.
தற்போது அந்த மாணவனை உளவியல் ஆலோசனைக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.