ரக்ஷாபந்தன்: பெண்களுக்கு 'அன்பளிப்பாக' வெங்காயம் வழங்கிய பாஜக!
ஹைதராபாத்: ரக்ஷாபந்தனையொட்டி ஆண்களுக்கு பெண்கள் ராக்கி கட்டிவிடுவது வழக்கம்... அப்படி ராக்கி கட்டும் பெண்களுக்கு பாரதிய ஜனதா கட்சியோ அன்பளிப்பாக 'வெங்காயத்தை' வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வெங்காயத்தின் விலை ரூ80ஐ தாண்டி ரூ100ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்திருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சியான பாஜகவோ இதை அரசியல் அஸ்திரமாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாஜக தலைமையில் நேற்று ராக்கி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பாஜகவின் மூத்த தலைவர்களான வெங்கையா நாயுடு, பண்டாரு தத்தாத்ரேயா, மாநில பாஜக தலைவர் கிஷண் ரெட்டி உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ராக்கி கட்ட கலந்து கொண்ட பெண்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா 2 வெங்காயங்கள் வழங்கப்பட்டன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த வெங்கையா நாயுடு, முன்பெல்லாம் வெங்காயத்தை நறுக்கும் போதுதான் கண்ணீர் வரும். இப்போது வெங்காயத்தை வாங்கும்போதே கண்ணீர் வருகிறது. இது ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தோல்வியையே காட்டுகிறது என்றார்.
இப்படி வெங்காயத்தை வழங்குவதற்காக பாஜக தலைமையகத்தில் பல கிலோ வெங்காயம் வாங்கிக் குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.