தக்காளி கெட்ச் அப்ல் எலி முடி... மெக்சிகோ நிறுவன உணவுப் பொருளுக்கு பிரேசிலில் தடை
பிரேசிலியா: தக்காளி கெட்ச் அப்பில் எலியின் ரோமம் கிடந்ததை பிரேசில் நாட்டு சுகாதார ஆய்வாளர்கள் கண்டறிந்ததைத் தொடர்ந்து, மெக்சிகோ நாட்டின் ஹெய்ன்ச் கெட்ச் அப்புகளுக்கு பிரேசிலில் தடை விதித்து உத்தரவிடப் பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டின் பிரபல உணவுத் தயாரிப்பு நிறுவனம் ஹெய்ன்ஸ். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தவகையில் சமீபத்தில் பிரேசிலில் விற்பனைக்கு வந்த ஹெய்ன்ஸ்ன் தக்காளி கெட்ச் அப் பாட்டில் ஒன்றில் எலியின் முடி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து, பிரேசில் நாட்டு சுகாதார ஆய்வாளர்களின் அறிவுறுத்தலின் படி, சந்தையில் ஹெய்ன்ஸ்ன் கெட்ச் அப் பாட்டில் விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு அரசு.
சர்வதேச தர விதிமுறைகளின் படியே தங்களது உணவுப் பொருட்கள் தயார் செய்யப் படுவதாக தன்னிலை விளக்கம் அளித்துள்ள ஹெயின்ஸ் நிறுவனம், பிரேசிலின் விசாரணையைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்தான விசாரணையை மெக்சிகோ நாட்டு சுகாதார நிறுவனமான கொபெப்ரிஸும் முடுக்கி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்த போதும், பிரேசிலில் தற்போது விற்பனைக்குள்ள ஹெயின்ஸ்ன் தக்காளி கெட்ச் அப் பாட்டில்கள் சென்ற வருடம் இறக்குமதி ஆனவை என்றும், ஏற்கனவே பெரும்பான்மையான பாட்டில்கள் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர் பிரேசில் வணிகர்கள்.
தடை செய்யப்பட்ட மீதமுள்ள தனது கெட்ச் அப் பாட்டில்களை பிரேசிலிடமிருந்து திரும்பப் பெற சம்மதித்த ஹெயின்ஸ் நிறுவனம், அதன் எண்ணிக்கை குறித்தான விவரங்களை வெளியிட மறுத்து விட்டது.












Click it and Unblock the Notifications