காதலிப்ப, ஆனால் கல்யாணம் பண்ணமாட்ட: டெய்லரைக் கடத்திய முன்னாள் காதலி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் 25 வயது வாலிபர் அவரது முன்னாள் காதலியால் கடத்தப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபாஹிம்(25). அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் தையல்காரராக வேலை பார்த்துள்ளார். அப்போது அவருக்கும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஃபாஹிம் டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதில் இருந்து அவருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தொடர்பு இல்லை.
ஆனால் அப்பெண்ணோ ஃபாஹிமை திருமணம் செய்து கொள்ள விரும்பி நேற்று அவரது வீட்டுக்கே வந்துவிட்டார். அவருடன் அவரது தோழிகள் இருவரும் வந்துள்ளனர். ரம்ஜான் பண்டிக்கைகாக உத்தர பிரதேசம் வந்த ஃபாஹிம் அங்கு தான் இருந்தார். அவர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் தனது தோழிகளுடன் சேர்ந்து அவரை காரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
இதையடுத்து ஃபாஹிமின் தம்பி இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பெண்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications