தூத்துக்குடி: விசைப்படகு கடலில் மூழ்கியது: 7 மீனவர்கள் உயிர் தப்பினர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசைப்படகு கடலில் மூழ்கிய விபத்தில் 7மீனவர்கள் உயிர் தப்பினர்.
தூத்துக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் ஜூடு. இவருக்கு சொந்தமான விசைப்படகில் புதுத்தெருவை சேர்ந்த ஜெரோம்(வயது 34), பிராங்ளின்(33), அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த அந்தோணிமெல்கம்(43), பாத்திமா நகரைச் சேர்ந்த பார்த்திஸ்(34), சகாயம், புன்னக்காயலை சேர்ந்த செல்வக்குமார்(30), திரேஸ்புரத்தை சேரந்த ஞானம் ஆகிய 7பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீன்பிடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு இவர்கள் விசைப்படகில் தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்திற்கு திரும்பி வந்தனர். இவர்களது விசைப்படகு தூத்துக்குடி வெளித்துறைமுகம் பகுதியில் வந்தபோது திடீரென்று படகில் ஓட்டை விழுந்து படகின் உள்ளே தண்ணீர் புகுந்தது.
தண்ணீர் வேகவேகமாக படகின் உள்ளே புகுந்த நிலையில் படகு கடலில் மூழ்க ஆரம்பித்தது. செய்வது அறியாமல் திகைத்த மீனவர்கள் 7பேரும் உயிரை பாதுகாத்துக்கொள்ள கடலில் குதித்தனர். இதில் ஜெரோம், அந்தோணி, பார்த்திஸ், செல்வக்குமார் ஆகிய 4பேரும் நீந்தியபடி கடலில் தத்தளித்தனர். இதனை அந்த வழியாக வந்த மீனவர்கள் கண்டு அவர்களை பத்திரமாக மீட்டு கரைசேர்த்தனர்.
இந்நிலையில் கடலில் குதித்து மாயமான பிராங்ளின், ஞானம், சகாயம் ஆகிய மூவரும் வெளித்துறை முக பகுதியில் நின்ற சரக்குகப்பலின் சங்கிலியை பிடித்தபடி தத்தளித்தனர். இதனைக்கண்ட கப்பல் பணியாளர்கள் அவர்கள் 3பேரையும் மீட்டு கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர்.
மொத்தத்தில் கடலில் குதித்த 7மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதேசமயம், கடலில் மூழ்கிய விசைப்படகின் மதிப்பு 40லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.