தலைக்கு மேல் கடன் சுமை... கணவன், மனைவி தற்கொலை
தூத்துக்குடி: உடன்குடி அருகே கடன் தொல்லையால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள பரமன்குறிச்சி சியோன் நகரை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 55). அப்பகுதியில் தங்கநகை பட்டறை நடத்தி வந்த இவருக்கு விஜயா என்ற மனைவியும், ராமலெட்சுமி, அம்சலெட்சுமி, பூர்ணிமா என 3பெண் குழந்தைகள் உள்ளனர்.
ராமலெட்சுமியும், அம்சலெட்சுமியும் சென்னையிலுள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் பயின்று வருகின்றனர். பூர்ணிமா அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றார்.
மதுப்பழக்கம் கொண்ட தங்கவேல் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலை தனது அப்பா-அம்மா வெகுநேரமாகியும் எழுந்திருக்காதது கண்டு பூர்ணிமா அருகில் சென்று பார்த்தார். அப்போது அவர்கள் இருவரும் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பான தகவல் கிடைத்த திருச்செந்தூர் போலீசார் விரைந்துசென்று தற்கொலை செய்துகொண்ட கணவன்-மனைவியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் தங்கவேலுவின் பையில் இருந்த கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர்.
அந்த கடிதத்தில் நண்பர் ஒருவருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்காததாலும், இன்று நடக்க இருந்த திருமணத்திற்கு நகை செய்து கொடுக்க இயலாத காரணத்தினாலும் தற்கொலை செய்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பெண் குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
A couple commited sucide near Udankudi leaving behind 3 girl children.