ஆவடியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: 2 கல்லூரி மாணவர்கள் பலி
சென்னை: மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் இருவர் மீது டேங்கர் லாரி மோதியதில் அதே இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். இதனால் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு முகப்பேரை சேர்ந்தவர் செல்லதுரை. தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்கள் விஜயசாரதி, விஜயவரதன் (வயது 18) இருவரும் இரட்டையர்கள்.
விஜயசாரதி செம்பரம் பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விஜயவரதன் ஆவடி எஸ்.ஏ.என்ஜினீரிங் கல்லூரியில் பி.டெக் படித்தார். இன்று காலை அண்ணன்-தம்பி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றனர்.
சென்னீர் குப்பம் அருகே சென்ற போது பின்னால் வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இரண்டு பேரும் லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் எஸ்.ஏ. கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லி- ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
ஒன்றாக பிறந்த இரட்டையர்கள் விபத்தில் பலியானது உறவினர்களையும், மாணவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications