விஜயகாந்த்துக்கு ராகுல் காந்தி வாழ்த்து பேக்ஸ் அனுப்பியது எதுக்கு..?!
சென்னை: இதுவரை இல்லாத புதுமையாக தமிழக அரசியல் தலைவர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து புதுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
மூத்த தலைவர் கருணாநிதிக்கோ அல்லது வேறு யாருக்குமே இதுவரை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பழக்கப்பட்டவரில்லை ராகுல் காந்தி.
ஆனால் முதல் முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து பேக்ஸ் அனுப்பி புதுப் புதுக் கதைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் ராகுல் காந்தி.
61 வயசு விஜயகாந்த்
61வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் விஜயகாந்த். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து பேக்ஸ் அனுப்பியிருந்தார் ராகுல் காந்தி.
இது ரொம்பப் புதுஸ்ஸா இருக்கே...
ராகுல் காந்தி இப்படி தமிழக தலைவர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பது இதுதான் முதல் முறையாம். காங்கிரஸ் கட்சியினர் இதுகுறித்து கிசுகிசுப்பாக பேசிக் கொள்கின்றனர்.
திருப்பித் திருப்பித் திருப்பித் திருப்பி...
ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து பேக்ஸ் அனுப்பிய விஷயத்தை கேப்டன் டிவியில் நேற்று திருப்பித் திருப்பி காட்டிக் கொண்டிருந்தனர். சொல்லிச் சொல்லி மகிழ்ந்தனர்.
ஒருவாட்டி கூட...
திமுக முக்கிய கூட்டணிக் கட்சியாக இருந்த காலகட்டத்தில் கூட கருணாநிதிக்கு ஒருமுறை கூட ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததில்லை. போன் செய்ததில்லை, தந்தி அனுப்பியதில்லை.. நேரிலும் வந்து பார்த்ததில்லை. எனவே விஜயகாந்த்துக்கு பேக்ஸ் அனுப்பி வாழ்த்தியது பெரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
நூல் விட்டுப் பார்க்கிறாரோ...
ராகுல் காந்தியின் இந்த வாழ்த்தானது, தேமுதிகவை காங்கிரஸ் கூட்டணிக்குள் இழுக்கப் பார்க்கும் முயற்சியோ என்றும் புதிப் பார்வையுடன் பார்க்கப்படுகிறது.
நல்லாத்தானே பேசுனாரு கேப்டன்...
ராகுல் காந்தியோடு நில்லாமல் மூத்த காங்கிரஸ் தலைவரும், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக்கும் விஜயகாந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினாராம். பதிலுக்கு விஜயகாந்த்தும் சந்தோஷமாக பேசினாராம்.
உற்சாகத்தில் கேப்டன் கட்சியினர்
இப்படி காங்கிரஸ் பெருந்தலைகள் அடுத்தடுத்து தங்களது தலைவரை வாழ்த்தியதால் ஆஹாஹா .. வரப் போகுதுய்யா.. கூட்டணி வரப் போகுதுய்யா.. என்று வடிவேலு பாணியில் படு குஷியாக காணப்படுகிறார்களாம் தேமுதிகவினரும்.
ரொம்ப சந்தோஷம்ணே...
இதுகுறித்து விழுப்புரத்தைச் சேர்ந்த தேமுதிக பிரமுகர் ஒருவர் கூறுகையில், சில எம்.எல்.ஏக்களும், தலைவர்களும் கேப்டனுக்கு துரோகம் செய்து விட்டு அதிமுகவுக்கு ஆதரவாக மாறினர். ஆனால் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எங்களது தலைவரை வாழ்த்தியுள்ளனர். இது மகிழ்ச்சி தருகிறது என்றார்.
கூட்டணிக்கு திமுகவினர் ஆர்வம்
அவரே மேலும் கூறுகையில், பல மாவட்ட திமுக செயலாளர்கள் கூட எங்களுடன் கூட்டணி வைக்க விருப்பத்துடன் உள்ளனர். இது எங்களது முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை என்பதையே காட்டுகிறது என்றார்.
தொண்டர்களிடமே கேட்பேன்
ஆனால் கூட்டணி குறித்து கமிட் பண்ணிக்காமல் பேசுகிறார் விஜயகாந்த். நேற்று கூட தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது செய்தியாளர்கள் சிலர் இதுகுறித்துக் கேட்டதற்கு, சேலத்தில் மாநாடு போட்டு தொண்டர்களிடம் கேட்டுத்தான் அப்போது கூட்டணியை முடிவு செய்தேன். அதேபோல இப்பவும் தொண்டர்களிடம் கேட்டுத்தான் எதையும் முடிவு செய்வேன். முதலில் தேர்தல் வரட்டும், பிறகு பார்க்கலாம் என்றார்.
முரசை 'அடிக்க'ப் போவது கையா அல்லது சூரியனா... பொறுத்திருந்து பார்ப்போம்!