தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்... ஒரே வாரத்தில் 2வது முறையாக தமிழகத்துக்கு எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தக் கூடும் என்று ஒரே வாரத்தில் 2வது முறையாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து 2வது முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் அனைத்து பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு முதல் விடிய விடிய கடலோரப் பகுதிகளில் வாகன சோதனையும் நடத்தப்பட்டது.

பிப்ரவரியில் சிக்கிய 3 பாகிஸ்தானியர்கள்.
கடந்த பிப்ரவரி 2-ந் தேதி இலங்கையில் 3 பாகிஸ்தானியர்களிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை செய்தனர். அப்போது போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்கு மூவரும் செல்ல இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சதி வேலை பற்றி ஒப்புதல் வாக்குமூலம்
மேலும் பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகள் இலங்கைக்கு வந்து அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவி சதி வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்

முதல் கட்டமாக 8 தீவிரவாதிகள்
அத்துடன் முதல் கட்டமாக 8 தீவிரவாதிகளை ஊடுருவ வைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக மூவரும் தெரிவித்திருக்கின்றனர்.

மோப்பம் பிடித்த இந்தியா
அதே நேரத்தில் இந்திய உளவுத்துறையும் மூன்று பாகிஸ்தானியர் பிடிபட்டதையும் அவர்கள் தெரிவித்த தகவலையும் மோப்பம் பிடித்தது. இதைத் தொடர்ந்துதான் தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் 2வது முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ராமேஸ்வரத்தில் தளபதி ஆலோசனை
இதனிடையே இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி அணில் சோப்ரா ராமேஸ்வரத்தில் உச்சிப்புளி கடற்படை விமான தளத்தில் கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் கடற்படையினர் சந்திப்பை நடத்தினர். கடற்பரப்பில் சந்தேக நபர்கள் தென்பட்டால் உடனே தெரிவிக்குமாறு மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.












Click it and Unblock the Notifications