ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு- அரசு வழக்கறிஞரை திரும்பப் பெற்றது கர்நாடகா!
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை கர்நாடக அரசு இன்று அதிரடியாக திரும்பப் பெற்றுக் கொண்டது.
1991-96 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு முட்டுக்கட்டுகளை தாண்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்க்கின் இறுதிக் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அண்மையில் திடீரென திமுக சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் திமுக தரப்பினர் தங்களையும் வழக்கில் வாதாடவும் அரசு வழக்கறிஞருக்கு உதவவும் அனுமதி கோரப்பட்டது.

இதற்கு பெங்களூர் நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது. இதன் பின்னர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், வழக்கை பெங்களூருக்கு மாற்றியதன் நோக்கம் நிறைவேறாத சூழல் உள்ளது. தற்போதைய அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இம்மனு மீது பதிலளிக்க கர்நாடகா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று திடீரென கர்நாடகா மாநில தலைமைச் செயலாளர் நாகராஜ் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞர் பவானிசிங் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications