யாழ்ப்பாணத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை!
யாழ்ப்பாணம்: இலங்கைக்கு ஒரு வார கால பயணம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் நிலைமை குறித்து ஆராய்வதற்காக நவநீதம் பிள்ளை தலைமையிலான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் இலங்கை வந்துள்ளனர். அவர்கள் நேற்று தலைநகர் கொழும்பில் முகாமிட்டு தங்களது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
தலைநகர் கொழும்பில் மட்டுமல்லாது தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளிலும் நவநீதம் பிள்ளை குழு ஆய்வு நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகைக்கு எதிர்ப்பு பவுத்த பிக்குகள், சிங்கள அமைப்பினர் நேற்று கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொழும்பில் அமைச்சர்களுடன் ஆலோசனை
கொழும்பில் நேற்று அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, ஹக்கீம் ஆகியோரை நவநீதம் பிள்ளை சந்தித்துப் பேசினார்.

மலையகத் தமிழர் பிரச்சனை
மேலும் கொழும்பில் பல்வேறு பொதுமக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகளும் நவநீதம்பிள்ளையை நேரில் சந்தித்து உரையாடினர். மலையகத் தமிழர்களின் சார்பாக அருட்தந்தை கீதபொன்கலன், நவநீதம்பிள்ளையிடம் மனு ஒன்றைக் கொடுத்தார். மலையக மக்களின் நில உரிமை, மொழி உரிமை மற்றும் குடியுரிமைப் பிரச்சனைகள் குறித்து நவநீதம் பிள்ளையிடம் முறையிடப்பட்டது.

யாழ். பயணம்
கொழும்பில் ஆலோசனைகளை முடித்துக் கொண்ட நவநீதம்பிள்ளை குழுவினர், நேற்று இரவு சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பாணம் சென்றடைந்தார்.

யாழில் ஆய்வு
யாழ்ப்பாணத்துக்கு வந்து இறங்கியவுடன் ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் யாழ். மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களை அவர் பார்வையிட்டார். இன்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் பல்வேறு இயக்கத்தினரை சந்தித்துப் பேச இருக்கிறார் நவநீதம் பிள்ளை.

சாலை மார்க்கமாக கிளிநொச்சி
யாழ். விசாரணைகளை முடித்து ஏ-9 நெடுஞ்சாலை வழியாக கிளிநொச்சி சென்றடைய திட்டமிட்டிருக்கிறார் நவநீதம்பிள்ளை. அங்கிருந்து இறுதிப் போர் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் செல்ல இருக்கிறார்.

திருகோணமலை, மூதூர் படுகொலைகள்
திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் மற்றும் மூதூரில் இடம்பெற்ற 17 தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலைகள் தொடர்பாகவும் நவநீதம்பிள்ளை குழுவினர் விசாரணை நடத்த இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications