2.5 டன் ரேஷன் அரிசி கடத்தல்.. தூத்துக்குடியில் 5 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ரேசன் அரிசி கடத்திய 5பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி-திருச்செந்தூர் வழித்தடத்தில் லாரியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் காமாட்சி கணேஷ் தலைமையில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்வேல், பறக்கும் படை தாசில்தார் வீராசாமி, ஆறுமுகனேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், உணவு கடத்தல் தடுப்பு ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் மற்றும் அதிகாரிகள் குழுவினர் காயல்பட்டடணம் ஓடக்கரை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையின்போது. லாரியில் சுமார் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள 2.5 டன் ரேஷன் அரிசி 53 மூடைகளில் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

லாரி டிரைவரான மெஞ்ஞானபுரம் ராமசாமி மகன் மாசானமுத்து(36), அதே பகுதியைச் சேர்ந்த தினியோன் மகன் எபனேசர் (18), மகராஜா மகன் இசக்கிராஜா (20), பரமன்குறிச்சி சக்திவேல் மகன் முத்துக்குமார் (19) மற்றும் சென்னை சுயம்புலிங்கம் மகன் பூவலிங்கம்(26) ஆகிய 5பேரையும் ஆறுமுகநேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications