ஆந்திர பந்த்... பஸ் இல்லை, வேன் இல்லை, லாரி கூட இல்லை... திருப்பதி பக்தர்கள் அவதி
திருப்பதி: தெலுங்கானா உருவாக்கக் கூடாது, ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்ற கோரிக்கைகளுடன் நடந்து வரும் பந்த் காரணமாக திருப்பதி கோவில் பக்தர்கள் பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளனர்.
பஸ், வேன், லாரி என எந்த வாகனமும் ஓடவில்லை என்பதால் பக்தர்கள் ஆங்காங்கே ஸ்தம்பித்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2 நாள் முழு அடைப்பு என்பதால் நேற்று முதலே திருப்பதி பக்தர்கள் பாதிப்படைந்துள்ளனர். இன்றும் பந்த் தொடர்கிறது.

திருப்பதி எல்லையை மூடும் போராட்டம்
திருப்பதிக்கான எல்லையை மூடும் போராட்டத்தை ஒருங்கிணைந்த ஆந்திராவை கோரும் கூட்டுக் குழு அறிவித்துள்ளது.

நேற்று முதல்
இதன் காரணமாக நேற்று முதல் திருப்பதிக்குள் பக்தர்கள் யாரும் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் ஓடவில்லை
திருப்பதியில் இருந்து மேலே திருமலைக்கு வாகனங்களை இயக்கவும் திருப்பதியில் கடைகள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களைத் திறக்கவும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் போராட்டக் குழு அறிவித்திருப்பதால் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை.

பஸ், வேன், லாரிகள் ஓடவில்லை
பஸ்கள், வேன்கள், லாரிகள் என எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரயில்களை மட்டுமே விட்டு வைத்துள்ளனர்.

டிடிடி பஸ்களுக்கு மட்டும் அனுமதி
அதேசமயம், திருப்பதி தேவஸ்தானம் இயக்கி வரும் இலவச பேருந்துகளுக்கு மட்டும்விதி விலக்கு அளித்துள்ளனர்.

ரயில் நிலையத்திலிருந்து திருமலை வரை
இந்தப் பேருந்துகள் ரயில் நிலையத்திலிருந்து திருமலை வரை இயக்கப்படுகின்றன.

கூட்டம் கட்டுக்கடங்கவில்லை
ஆனால் பெரும் கூட்டம் ரயில் நிலைத்தில் இருப்பதால் இந்தப் பஸ்கள் போதவில்லை. கூட்டம் நிரம்பி வழிகிறது.

கோவில் நிர்வாகமே சாப்பாடு
பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சாப்பாடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. காரணம், ஹோட்டல்கள் எதுவும் இல்லாத காரணத்தால்.

திருப்பதிக்கு பஸ் இல்லை
ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் மாநிலத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் திருப்பதிக்கு பஸ்களை இயக்கவில்லை. அலிப்பிரி, திருமலை இடையே சில பஸ்கள் ஓடினாலும் கூட அதனால் பக்தர்களுக்கு பலன் இல்லாத நிலையே காணப்படுகிறது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருப்பதியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அங்கு மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஊர்வலம் நடத்தப்பட்டது.

சாலையில் கிருஷ்ணாஷ்டமி
நடுச் சாலையில் பல இடங்களில் கிருஷ்ணாஷ்டமியைக் கொண்டாடினர் போராட்டக் குழுவினர்.

உள்ளூர் மக்களும் அவதி
உள்ளூரைச் சேர்ந்த மக்கள் கூட நேற்று திருப்பதி கோவிலுக்குப் போக முடியாமல் தவித்தனர்.

வெறிச்சோடிய சாலைகள்
டாக்சி உள்ளிட்ட எதுவுமே ஓடாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. திருப்பதியில் உள்ள அத்தனை பேரும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக டாக்சி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

28,000 பக்தர்கள் மட்டுமே
நேற்று திருப்தி கோவிலுக்கு 28,000 பக்தர்கள் மட்டுமே சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications