பகுத்தறிவுவாதி தாபோல்கர் படுகொலை- கோவாவில் சிக்கினான் சனாதன் சன்ஸ்தாவின் ஷிண்டே!!
கோவா: மகாராஷ்டிராவில் பகுத்தறிவுவாதி தாபோல்கரை சுட்டுப் படுகொலை செய்தது தொடர்பாக ஹிந்து தீவிரவாத இயக்கமாமன சனாதன் சன்ஸ்தாவின் சந்தீப் ஷிண்டே என்பவன் கோவாவில் பிடிபட்டுள்ளான்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஆகஸ்ட் 20-ந் தேதி நடைபயிற்சி சென்று கொண்டிருந்த போது தாபோல்கரை மர்ம நபர்கள் சுட்டுப் படுகொலை செய்தனர். தம் வாழ்நாளெல்லாம் பகுத்தறிவு சிந்தனையை பரப்பவும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும் போராடிய தாபோல்கர் படுகொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தாபோல்கருக்கு சிறப்பு செய்யும் வகையில் அவரது போராட்ட இலக்குகளில் ஒன்றான பில்லி சூனியம், மூட நம்பிக்கைகளுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது. தாபோல்கரை ஹிந்து தீவிரவாத இயக்கங்களே படுகொலை செய்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவாவில் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்து தீவிரவாத இயக்கம் நடத்தி வரும் ஆசிரமத்தில் பதுங்கி இருந்த சந்தீப் ஷிண்டே என்பவை மகாராஷ்டிரா போலீசார் பிடித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு கோவா குண்டு வெடிப்பில் அவன் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். தற்போது சந்தீப் ஷிண்டேவை காவலில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சனாதன் சன்ஸ்தானாவைச் சேர்ந்த 70 பேரிடம் ஏற்கெனவே போலீசார் விசாரணை நடத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.