ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிப்பு- சுப்ரீம் கோர்ட்டில் பவானிசிங் முறையீடு!
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞரான பவானிசிங் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார்.
1991-96ஆம் ஆண்டு முதல் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வழக்கில் இணைந்த திமுக
பல முட்டுக்கட்டைகளைத் தாண்டி பெங்களூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக இந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ள அனுமதி கோரியது. பெங்களூர் நீதிமன்றமும் இதற்கு அனுமதி அளித்தது.

பவானிசிங்கை நீக்க கோரி திமுக மனு
இதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை பதவியிலிருந்து நீக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய்தார்.

கர்நாடகாவுக்கு நோட்டீஸ்
இந்த மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசு தலைமைச் செயலாளர், சட்டத் துறை செயலாளர் ஆகியோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பவானிசிங் அதிரடியாக வாபஸ்
இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி பவானி சிங்கை அரசுத் தரப்பு வழக்கறிஞராக நியமித்த உத்தரவை கர்நாடக அரசு திடீரென திரும்பப் பெற்றது.

ஹைகோர்ட்டில் முறையீடு
கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பவானிசிங் மனு தாக்கல் செய்தார். இம் மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.எஸ்.போப்பண்ணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்த போது தமது மனுவை பவானிசிங் திரும்பப் பெற்றார்.

சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறோம்
மேலும், தமது நியமன உத்தரவை திரும்பப் பெற்றுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருப்பதாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications