அப்பாடா 6 யானைகளையும் புடிச்சிட்டாங்க... ஆபரேசன் மலை சக்சஸ்.. ஆனால், கும்கி யானைக்கு மதம் பிடித்தது!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டாகசம் செய்து வந்து 6 காட்டு யானைகளை மயக்க ஊசி போட்டு பிடித்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, மேல்செங்கம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 6 காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வந்தது.
இந்த யானைகளால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். அந்த யானைகளை திரும்பவும் காட்டுக்குள் அனுப்பும் முயற்சியில் வனத் துறையினர் பலமுறை ஈடுபட்டும் பலனளிக்கவில்லை.

ஆபரேசன் மலை
திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில ஆண்டுகளாக அட்டகாசம் செய்து வந்த 6 காட்டு யானைகளை பிடித்து, முதுமலை மற்றும் ஆனைமலை (டாப்சிலிப்) முகாம்களில் அடைக்கும் பெரிய முயற்சியான ‘ஆபரேஷன் மலை' கடந்த 26ம் தேதி தொடங்கியது.

5 கும்கிகள்
மயக்க ஊசி செலுத்துவதற்கான மருத்துவக்குழுவினர், வன உயிரியல் விஞ்ஞானிகள், வனத்துறை அதிரடிப்படையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் 5 கும்கி யானைகளின் உதவியுடன் யானைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒற்றைக் கொம்பன்
சுமார் 22 வயதுள்ள பெண் யானை, 20 வயதுள்ள ஒற்றை கொம்பன் எனப்படும் ஆண் ஆகியவற்றை மயக்க ஊசி செலுத்தி நேற்று முன்தினம் மாலை பிடித்தனர். அதில், ஆண் யானை யை மட்டும் நேற்று அதிகாலை 2 மணி அளவில் லாரி மூலம் பாதுகாப்பாக ஆனைமலை முகாமுக்கு அனுப்பி வைத்தனர். மற்ற யானைகளை பிடிப்பதற்காக பெண் யானையை மட்டும் தொடர்ந்து காட்டுப்பகுதியில் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்தனர்.

விடிய விடிய போராட்டம்
இதனைதொடர்ந்து காட்டுக்குள் தப்பியோடிய 4 யானைகளை விடிய விடிய போராடி துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பிடிபட்ட 2 பெண் யானை களையும் நேற்று இரவு தனித்தனி வாகனங்களில் ஏற்றி, முதுமலை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கும்கி யானைக்கு மதம்
காட்டு யானைகளை பிடிக்க அழைத்து வரப்பட்ட, ஒரு, "கும்கி' யானைக்கு, மதம் பிடித்ததால், அந்த யானை தனியாக கட்டி வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது.

கும்கியாகும் ஒற்றைக் கொம்பன்
திருவண்ணாமலையில் இருந்து பிடித்து வரப்பட்ட ஒற்றை கொம்பன் ஆண் யானையை, டாப்சிலிப் வரகளியார் முகாமில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மரக்கூண்டில் அடைத்துள்ளனர். அதை மற்ற காட்டுயானைகள் தாக்காமல் இருக்க 6 கும்கி யானைகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. இனி, இந்த யானையை கும்கியாக மாற்ற பயிற்சி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications