ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் 6 பேர் கைது?
வேலூர் அருகே தமிழக -ஆந்திர எல்லையில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த 6 பேரையும் சுற்றி வளைத்து பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் சேலத்தில் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ரமேஷ் படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் பா.ஜ.க சார்பில் தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
சேலத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்ற பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, குற்றவாளிகளை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினார்.
இதையடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் அருகே தமிழக - ஆந்திரா எல்லையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த கொலையாளிகள் 6 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், சி.பி.சி.ஐ.டி தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.