புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் குற்றங்கள்… விசாரணை நடத்த சென்னை ஹைகோர்ட் உத்தரவு
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக ஆசிரம வாசிகள் துணை ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரமத்திற்கு இதுகுறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸுக்கு தடை கோரி ஆசிரம நிர்வாகிகளில் ஒருவரான மனோஜ்தாஸ் குப்தா என்பவர் தொடர்ந்த வழக்கிலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறதா, ஆசிரம நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ராமன் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் அரவிந்தர் ஆசிரமத்தில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.