பெண்களின் குரல்வளையை நெறிக்கும் வரதட்சணை: மணிக்கு ஒருவர் பலி
டெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் வரதட்சணை கொடுமையால் ஒரு பெண் இறப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வருமாறு,
மணிக்கு ஒரு மரணம்
கடந்த ஆண்டு மட்டும் நம் நாட்டில் 8,233 பெண்கள் வரதட்சணை கொடுமையால் இறந்துள்ளனர். நம் நாட்டில் மணிக்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் இறக்கிறார்களாம்.
ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு
கடந்த 2007ம் ஆண்டில் 8,093 பெண்கள் வரதட்சணை கொடுமையால் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2008ல் 8,172 ஆகவும், 2009ல் 8, 383 ஆகவும், 2010ல் 8,391 ஆகவும் அதிகரித்துள்ளது.
படித்தவர்கள் கூட
வரதட்சணை கொடுமைகளில் வறுமையில் வாடுபவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் முதல் மேல்தட்டு மக்கள் வரை ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அதிகம் படித்தவர்கள் கூட வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
சட்டத்தில் ஓட்டை
வரதட்சணை கொடுமையை தடுக்கும் சட்டத்தில் பல ஓட்டைகள் இருக்கிறது என்றும் அவற்றை கடுமைப்படுத்த வேண்டும் என்றும், 1983ல் திருத்தப்பட்ட வரதட்சணை சட்டம் மூலம் இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கவில்லை என்றும் டெல்லி கூடுதல் துணை கமிஷனர் சுமன் நல்வா தெரிவித்துள்ளார்.