திண்ணையில் 'கக்கா' போன கோழி.. கட்டி உருண்ட பாப்பாத்தியக்கா, மாரியம்மாக்கா!
மேட்டூர்: வீட்டுத் திண்ணையில் கோழி 'கக்கா' போய் விட்டது. இதையடுத்து இரண்டு பெண்களுக்கும், அவர்களது வீட்டாருக்கும் இடையே கடும் சண்டை மூண்டு கட்டி உருண்டனர். இதையடுத்து போலீஸ் வந்து ஐந்து பேரைக் கைது செய்து கொண்டு போகும் அளவுக்குப் போய் விட்டது இந்த 'கக்கா' மேட்டர்.
மேட்டூர் அருகே உள்ள கோல்நாயக்கன்பட்டி அருகில் உள்ள சாணாவூர் என்ற கிராமத்தில்தான் இந்த அதிரடி அடிதடி சம்பவம் நடந்துள்ளது. சாணாவூரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. காளியப்பனின் மனைவி. பக்கத்து வீ்ட்டில் வசித்து வருபவர் மாரியம்மாள்.
பாப்பாத்தி கோழி வளர்த்து வருகிறார். இந்தக் கோழிகளில் ஒன்று, மாரியம்மாள் வீட்டுத் திண்ணையில் போய் கழிந்து விட்டதாம். இதனால் மாரியம்மாள் சண்டைக்கு வந்து விட்டார். இருவருக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட, அவளே இவளே என்று ஆரம்பித்த சண்டை குடுமிபிடி சண்டையாக மாறியது. இரு பெண்களும் கட்டிப் புரண்டு ஏதோ சேவேல் சண்டை போல சண்டை போட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக சின்னப்பொண்ணு, குமார், மணிகண்டன், ராஜேந்திரன், பாப்பாத்தி வீட்டுக்காரர் காளியப்பன் ஆகியோரும் சண்டையில் ஐக்கியமாகி ரசாபாசமாகி விட்டது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போய் விரைந்து வந்தனர். இரு தரப்பும் கொடுத்த புகாரின் பேரில், காளியப்பன், ராஜேந்திரன், மணிகண்டன், குமார், சின்னப்பொண்ணு ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.
கோழி கக்கா போனதுக்கு இப்படியாக்கா சண்டை போடுவீங்க...!