பெட்ரோல், டீசல் விலை உயர்வு… சென்னையில் புதிய ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்த முடியுமா?
சென்னை: திடீரென உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வால், சென்னையில் புதிய ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்துவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் தமிழக அரசு சென்னை நகர ஆட்டோக்களுக்குப் புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்தது.
செப்டம்பர் 15ம் தேதிக்குள் புதிய கட்டணத்திற்கு ஆட்டோக்கள் மாற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விட்டதால் அரசுக்கும் சிக்கலாகியுள்ளது, ஆட்டோ டிரைவர்களும் புதிய கட்டணத்தை நிர்ணயிக்கும் கோரிக்கையுடன் கிளம்பியுள்ளனர்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 வரை சென்னையில் உயர்ந்துள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர். அரசு சமீபத்தில் நிர்ணயித்த புதிய கட்டணம் தங்களுக்குக் கட்டுப்படியாகாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
புதிய கட்டணம் சரிவருமா?
பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் புதிய கட்டணத்தின்படி ஆட்டோ ஓட்ட இயலாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தொழிற்சங்கத் தலைவர்களோ, பெரும் இக்கட்டான நிலையில் ஆட்டோ டிரைவர்களும், உரிமையாளர்களும் உள்ளனர். இது சவாலாக எழுந்துள்ளது என்று கூறுகின்றனர்.
ரூ.15 நிர்ணயிக்கலாம்
சிஐடியூ ஆட்டோ டிரைவர்கள் நலச் சங்க தலைவர் எம்.எஸ்.ராஜேந்திரன் கூறுகையில், ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 15 கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். அரசோ ரூ. 12 என்று நிர்ணயித்தஉள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. எனவே அரசின் கட்டணத்தில் ஆட்டோ ஓட்டுவது மிகக் கடினம் என்றார்.
ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், அரசுசொல்லும் கட்டணத்தில் ஆட்டோ ஓட்டினால் எங்களது வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகி விடும் என்கின்றனர்.
இதுதான் கட்டணம்
ஆனால் அரசுத் தரப்பில் என்ன கூறுகிறார்கள் என்றால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 80ஐத் தொடும் வரை இந்தப் புதிய கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வையும் மனதில் வைத்தே இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
நம்ம ஆட்டோ வரவேற்பு
அதேசமயம், நம்ம ஆட்டோ என்ற பெயரில் தற்போது ஓட்டி வரும் தனியார் திட்டத்தில் இயங்கி வரும் ஆட்டோ டிரைவர்கள், அரசின் கட்டணத்தை வரவேற்றுள்ளனர். பெட்ரோல் விலையை மனதில் கொண்டு நாங்கள் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். நாங்கள் நிர்ணயி்த்த கட்டணம் கிலோமீட்டருக்கு ரூ. 10தான். ஆனால் அரசு 12 என்று கூறியுள்ளது. எனவே எங்குளுக்கு நஷ்டமில்லை என்கிறார்கள்.