ராஜபாளையத்தில் மனைவி நல தின வேள்வி... மனைவியருக்கு கணவர்கள் மரியாதை
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த மனைவிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை மனதார ஆசிர்வாதம் செய்தனர்.
மனைவியரை அமர வைத்து கணவர்கள் மரியாதை செய்தது பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. பெரும் திரளான தம்பதியர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மனவளக்கலை மன்றம் வேதாத்திரி மகரிஷி அறிவுத் திருக்கோயிலில் மனைவி நல தின வேள்வி நடந்தது. இதில் ஏராளமான தம்பதியர் கலந்து கொண்டனர்.
வாழ்வில் இன்ப துன்பங்கள், ஏற்றம் இறக்கங்கள், நன்மை தீமைகளை மனதார ஏற்று இல்லறத்தில் இணைந்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என தம்பதிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்கள், தங்கள் மனைவிகளை மனதார ஆசிர்வதித்தனர். மலர்கள் கொடுத்து மகிழ்ந்தனர். அதே போல மனைவிகளும் கணவன்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகள் கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு அறிவுத் திருக்கோயில் டிரஸ்டி காசி விஸ்வநாதராஜா தலைமை வகித்தார். பேராசிரியை ராஜம் முன்னிலை வகித்தார். நகராட்சி முன்னாள் தலைவர் மகாலட்சுமி சங்கரராஜா, பெண்ணின் பெருமை குறித்து கணேசன் பேசினார். அறிவுத் திருக்கோயில் மவுனகுரு தர்மலிங்கம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்